Monday 26 September 2016

சகலகலாவல்லி மாலை - 3 & 4


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.

இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!                                                ( 3 )


எப்படி மழை பொழிவதை அறிந்து தோகைவிரித்து மயில் ஆடி மகிழ்கின்றதோ அதுபோன்று பல நூல்களையும் கற்றுத் தெளிந்த புலவர்கள் பொழிகின்ற கவிமழையில் களிப்படையும் சகலகலாவல்லியே! நீ எளியேனுக்கு அருளோடு அளித்த செழுமையான தெளிந்த தமிழ் அமுதத்தை சுவைப்பதன் மூலமாக ஆன்மீக அனுபவத்தை பெற்று உன் திருவருட்கடலில் மூழ்கித் திளைக்கும் நிலை எளியேனுக்கு வாய்க்கப்பெறுமா? அவ்வாறான அரும்பெரும் பேற்றை இந்த எளியேனுக்கு அருள்வாயாக!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!                                             ( 4 )

கடல் போன்று விரிந்த எண்ணிலாத வடமொழி நூல்களின் கருத்துக்களையும் செழுமை மிகுந்த அருஞ் செல்வமாகிய தமிழ் நூல்களின் கருத்துக்களும் அடியார்களின் நல்ல நாவினின்று எக்காலத்திலும் நீங்காது காத்து அருளும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!  அனைவரும் விரும்பும் வண்ணம் சிறப்புடைய பாடல்களை இயற்றும் திறனும் எல்லாத்துறைகளிலும் ஆளுமை தருகின்ற கல்வியும் சொற்சுவை நிரம்பிய வாக்கும் நாள்தோறும் பெருகி வளர்ந்திடு நிலைக்கு எளியேனை ஆளாக்கி அருள்வாயாக!

சகலகலாவல்லி மாலை - 1 & 2


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.



இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!                                    ( 1 )


காக்கும் கடவுளாகிய திருமால், ஊழிக்காலத்தில் ஏழுலகையும் காப்பதற்காக உண்டு, ஆலிலைமேல் துயின்றான். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமான் பித்தனைப் போல் சுடலையில் ஊழிக் கூத்தாடினான். ஆனால், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் பிரமன், கலைமகளாகிய உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்ந்தான். பிரம்மதேவனுக்கு கரும்புபோல் இனிப்பவளே! சகலகலா வல்லியே! உனது திருவடிகளை வெள்ளைநிறத் தாமரையே தாங்கியுள்ளது! வஞ்சனையற்ற குளிர்ந்த எளியேனின் மனம் வெண்தாமரை போல் ஆகிவிட்டது. எனவே எளியேனின் வெண்தாமரை போன்ற மனதினை உனது திருவடிகளை தாங்கும் ஆசனம் ஆக்கிக்கொள்ளக்கூடாதா? இன்னும் அத்தகு தகுதியான வெண்மையுள்ளம் வாய்க்கப்பெறவில்லையா? இது தகுமா?



நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!                                                ( 2 )


வெண்தாமரையை ஆசனமாகக் கொண்டிருப்பவளே! பசும்பொன் கொடி போன்றவளே! குன்றுபோலுள்ள பெரிய தனங்களை உடையவளே! ஐந்து பகுதிகளாகப் பகுத்து அலங்கரிக்கப்பட்ட காடுபோல் அடர்த்தியான கூந்தலை தாங்கியிருப்பவளே! கரும்பாக இனிப்பவளே! சகலகலாவல்லியே! அறிஞர் நாடி ஆராய்ந்து அறிவதற்குரிய பொருட்சுவையும் சொற்சுவையும் பொருந்திய நான்கு வகைக் கவிதைகளை இடையறாது பாடும் பணிக்கு எளியேனைப் பணித்து அருள் செய்வாயாக!

சகலகலாவல்லி மாலை - 9 & 10


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.



இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை




சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலாவல்லியே!                                            ( 9 )

நிலத்தை தொடும்படி உடைய நீண்ட துதிக்கையை உடைய நல்ல பெண் யானையும் அரச அன்னமும் நாணும்படி அழகாக நடைபயிலுகின்ற தாமரைபோன்ற திருவடிகளை உடையவளே! சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற மெஞ்ஞானவடிவமாக தோன்றி நிற்கின்ற உன்னை நினைத்து உணர்ந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் யாரும் இல்லை! (அவ்வாறு உணர்ந்து கொள்வது எளிதான ஒன்றல்ல என்று சுட்டுகிறார் குமரகுருபரர் ) அவ்வாறான பக்குவ ஆற்றலை எளியேனுக்கு அருள்வாயாக!





மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!                                   ( 10 )

படைக்கும் தெய்வம் நான்முகன் முதலாக சிறப்புடைய தெய்வங்கள் பலகோடி இருந்தாலும் உன்னைப்போன்று கண்கண்ட தெய்வம் வேறு இல்லை என்று தெளிந்து கூறும்படியாக விளங்குபவளே! சகலகலாவல்லியே!
மண்ணுலகம் முழுவதையும் தன் வெண் கொற்றக்குடையின் கீழ் கொண்டு ஆட்சிசெய்யும் மன்னரும் எளியேனின் இனிய தமிழ்ப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பணிந்து வணங்க அருள்செய்வாயாக!

ஆக்கம்: குமரகுருபரர் சுவாமிகள்




சகலகலாவல்லி மாலை - 7 & 8


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.



இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!                                       ( 7 )

அடியார்கள் நல்மனதால் எண்ணிப் புனைகின்ற நூல்களில் காணப்படுகின்ற வீடு பேற்றின்பமாகிய பாலையும் உலகியல் இன்பமாகிய நீரையும் தனித்தனியாக பிரித்தறிகின்ற தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும் வெண்மையான பெண் அன்னம் போன்றவளே! சகல கலாவல்லியே! பாட்டும் பாட்டுக்குரிய பொருளும் பாடலில் பொருந்தி நிற்கின்ற பயனும் எளியேனிடத்து வந்தடையும் வண்ணம் எளியேனுக்கு கலைமகளே…..உமது கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
அன்னம் நீரையும் பாலையும் பிரித்தறிந்து கொள்ளும் என்பர் கவிஞர். பேரின்பத்தை தருவனவற்றை உலகியல் இன்பங்களில் இருந்து பிரித்தறிந்து கொள்ளும் ஆற்றலை தனது அடியாருக்கு கலைமகள் வழங்கி அருள்பாலிப்பாள் என்பதை கலைமகளை வெண்மையான பெண் அன்னம் என்று சுட்டுவதன் வாயிலாக குமரகுருபரர் நமக்கு உணர்த்துகின்றார்.




சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே!                                 ( 8 )

செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருள் நமக்கு வாய்க்கப்பெறவில்லையே என்று வருந்துகின்ற நிலை எக்காலத்திலும் ஏற்படாவண்ணம் காலத்தால் அழியாத கல்வி என்னும் பெரும் செல்வத்தை தந்து அருள்பவளே! சகல கலாவல்லியே! 
சொல்வன்மையும், அட்டாவதானம் தசாவதானம் சதாவதானம் எனப் போற்றப்படுகின்ற கூர்ந்து கவனிக்கின்ற ஆற்றல்களும்( நினைவாற்றல் சக்தி) சிறப்புடைய கவிதைகளை பாடக்கூடிய வல்லமையுடைய வித்தகத்தன்மையும் எளியேனுக்கு அருளி எளியேனை உனது அடிமையாக்கி கொள்வாயாக!

Wednesday 14 September 2016

சகலகலாவல்லி மாலை - 5 & 6


சகலகலாவல்லி மாலை




வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.



இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

என்னுடைய சிற்றறிவுக்குத் தெரிந்த வரையில் பொருளுரை வழங்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.


சகலகலாவல்லி மாலை



பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே!                                 ( 5 )

திருமாலின் உந்தியில் இருந்து எழுந்த நீண்ட தண்டிடைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும் அன்னக்கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனுமாகிய நான்முகனின் சிறந்த நாவினையும் மனதினையும் ஆசனமான வெண்தாமரையாக கருதி அங்கு வீற்றிருப்பவளே! சகலகலாவல்லியே!
செம்பஞ்சுக் குழம்பினை பூசி அழகுடன் விளங்கும் செம்மையான பொன்போன்ற தாமரை போன்ற உனது திருவடிகள், எனது மனமாகிய பொய்கையில் இன்னும் மலராதது ஏன் தானோ?
பொய்கைகளில் தாமரை மலர்வது இயல்பு. எனது மனமும் நீர்போன்று மென்மையாக உள்ளது. குளிர்மையாக உள்ளது. நீர்நிலைகளில் எப்படித் தாமரை மலர்வது இயல்போ மென்மையாலும் குளிர்மையாலும் நீர்நிலை போல் ஆகிவிட்ட எனது மனமெனும் பொய்கையில் தாமரை என்னும்  உனது திருவடிகள் இன்னும் மலராது இருப்பது முறையோ என்று வருந்துகின்றார் குமரகுருபரர்.



பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!                                 ( 6 )

வானம், நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களிலும் எழுதாமறையாகிய வேதத்திலும் அடியார்களின் கண்ககளிலும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! சகலகலாவல்லியே!  பண், பரதம், நற்கல்வி, இனிய சொற்களால் கொண்டு கவிகள் (நூல்கள்) இயற்றும் ஆற்றல் ஆகியனவற்றையெல்லாம் விரும்பும் காலத்தில் எளிதில் எளியேன் அடையும் வண்ணம் திருவருள் பாலிப்பாயாக!



Tuesday 9 August 2016

சகலகலாவல்லி மாலை

Sakala Kala Valli Malai

சகலகலாவல்லி மாலை





கலைமகள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ஆடை உடுத்திய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தான். வெண்ணிற ஆடையை அமங்கலம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் சரஸ்வதி வெண்ணிற புடவையை அணிந்திருந்தாலும் அது முழுமையான வெண்ணிற ஆடையாக அல்லாமல் அதன் கரை வேறு நிறம் கொண்டதாக இருக்கும். மேலாடையும் வேறு நிறம் கொண்டதாகவே இருக்கும். இங்கே வெண்மை நிறம் தூய உள்ளத்தினை குறிக்கிறது. வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள். ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.

இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும். சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

கலியுகத்தில் சரஸ்வதியை வணங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம்.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் குமரகுருபரர் சுவாமிகள்
ஆவர்.

குமரகுருபரர் வடநாடு சென்று சைவ நெறியை பரப்ப எண்ணினார். கங்கை பாயும் புனித பூமியான காசி மாநகர் சென்று மடம் அமைக்க முனைந்தார். அப்போது காசி மாநகர் முகலாய அரசன் கட்டுப்பாட்டில் இருந்தது. குமரகுருபரர் சரஸ்வதியை குறித்து சகலகலாவல்லி மாலை என்றும் 10 பாடல்கள் கொண்ட தொகுதியை இயற்றி அன்னையின் அருளினால் பன்மொழிப் புலமைப் பெற்றார்.

தன் தவவலிமையால் ஒரு சிங்கத்தினை வசப்படுத்தி அதன் மேல் அமர்ந்து
முகலாய பாதுஷாவின் அரசவைக்கு சென்றார். இவரது திறமையை
கண்ட பாதுஷா வணங்கி வரவேற்றான். குமரகுருபரர் இந்துஸ்தானி
(உருது) மொழியில் பாதுஷாவிடம் உரையாடி தனது நோக்கத்தினை
தெரிவித்தார். பாதுஷா இவரது புலமையைக் கண்டு வியந்து அவர்
தாம் விரும்பும் நிலத்தினை மடம் கட்டுவதற்காக அளித்தான். குமரகுருபரர்
மடம் கட்ட ஏற்ற இடத்தினை சுட்டுமாறு இறைவனை நோக்கி வேண்டினார். கருடன் பறக்காத காசி மாநகரில் கருடன் அந்த இடத்தினை வட்டம் அடித்தது.
பூக்கள் வாசம் வீசாத காசி மாநகரில் பூக்கள் அந்த இடத்தில் வாசம்
வீசின. பல்லி சொல்லாத காசி மாநகரில் பல்லி அந்த இடத்தில்
நல்வாக்கு கூறியது. குமரகுருபரர் அந்த இடத்தினையே பாதுஷாவிடம் இருந்து பெற்றார்.

இத்தகைய சிறப்புடைய சகலகலாவல்லி மாலையை நாம் அனைவரும் தினமும் பாராயணம் செய்து கலைமகளின் அருளினைப் பெறலாம். இதனை
பயன்படுத்தும் முறை பின்வருமாறு:-

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும். பின்பு புதன் கிழமை
அல்லது அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அல்லது நவமி திதி வரும்
நாளில் அருகில் உள்ள அம்பிகையின் தலத்தில் சரஸ்வதி சிலையின் முன்பாக மஞ்சள் துணி திரி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு
இரண்டு தீபங்கள் வடக்கு முகமாக ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து சகலகலாவல்லி மாலையை 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பின்பு வீடு திரும்பி சரஸ்வதி படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.
இரண்டு விளக்குகள் பாராயணம் செய்யும் நேரத்தில் கண்டிப்பாக
எரிய வேண்டும். 48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும். அதற்கு
மேலும் பாராயணம் செய்வது மிகவும் நன்று. முதல் நாளன்றும் கடைசி
நாளன்றும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை
சாதம் இவற்றினை அன்னைக்கு நிவேதிக்கலாம்.

மேற்கண்ட பாராயண முறையால் கல்விச்செல்வம் பெருகும்.
சொல்வன்மை மற்றும் எழுத்துவன்மை உண்டாகும். கல்வித்தடை
அகலும். பன்மொழிப்புலமை ஏற்படும். தேர்வுகளின் மிகப் பெரிய
வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிட்டும்.
இசையில் வல்லமை உண்டாகும். கவிபாடும் திறனும் உண்டாகும். வேண்டிய
கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும். மிகுந்த அறிவு உண்டாகும். சபைகளில்
மதிப்பும், மரியாதையும் உண்டாகும். மங்களம் உண்டாகும். மனதிலும்,
வீட்டிலும் நிம்மதி உண்டாகும். கவலைகள் பறந்தோடும்.

இத்தகைய சிறப்பு மிக்க சகலகலாவல்லி மாலையை தினமும் பாராயணம்
செய்து சரஸ்வதியின் அருளைப் பெற இறையருளும், குருவருளும் துணை
நிற்கும் என்பதில் ஐயமில்லை.



இத்தகைய சிறப்பு வாய்ந்த சகலகலாவல்லி மாலையை அடுத்து வரும் பதிவுகளில் பகிரவிருக்கிறேன்! 

நன்றி!